சிறிலங்கா அதிபர் ராஜபக்சேவின் வருகையை கண்டித்து இன்று தமிழகத்தில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் பல்வேறு இடங்களிலும் நடைபெற்று வருகின்றன. சென்னையில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்ய முயன்ற விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் , முத்துக்குமார் தீக்குளித்த இடத்தில் நடந்த ஆர்பாட்டத்திற்கு தலைமைதாங்கிய நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமான் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதிகாரபூர்வமான பயணமாக இந்தியத் தலைநகர் டெல்லி வரும், சிறிலங்கா அதிபரின் வருகையைக் கண்டித்து, சென்னையில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்ய முயன்ற சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கைது செய்யப்பட்டார்.
இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் மயிலாப்பூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பழ.நெடுமாறன், ம.தி.மு.க. பொதுச் செயலர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில செயலர் நல்லகண்ணு, நடராஜன், நடிகர் டி.ராஜேந்தர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சென்னையில் முத்துக்குமார் தீக்குளித்த இடத்தில் நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமான் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் "எம்மினத்தை அழித்த உலகின் மிகப்பெரிய கொடுங்கோலர் ஒருவர் எவ்வித கேள்வியும் இன்றி உயரிய மரியாதையுடன் இந்தியா வருவதை நினைக்கும் பொழுது நாதியற்ற இனமா நம் தமிழினம் என்னும் குரல் உலகம் முழுவதும் நம் தமிழர்களிடையே எழுந்துள்ளது. ராஜபக்ஷேவுக்கு சர்வதேச அளவில் கடும் எதிர்ப்புக்குரல் எழுந்த போதிலும் இந்தியா அவருக்கு அனைத்து உதவிகளையும் செய்ய்து அவரை தொடர்ந்து காப்பாற்றிக் கொண்டிருக்கின்றது. இது இங்கு வாழும் தமிழர்களை இழிவுபடுத்தும் ஒன்றாகும்.அடக்குமுறைக்கு அஞ்சாது எமது எதிர்ப்பை தொடர்ந்து வெளிப்படுத்துவோம்.எமது நோக்கத்தில் வெற்றிபெறும் வரையும் எமது இனம் விடுதலை அடையும் வரையும் தொடர்ந்து களத்தில் இறங்கிப் போராடுவோம்." எனப் பேசினார். அப்போது அங்கு வந்த காவல்துறையினர், நாம் இயக்கத்தலைவர் சீமான், சென்னை மாவட்ட பொறுப்பாளர் அதியமான், உள்ளிட்ட நூற்றுக்கணக்கான நாம் தமிழர் இயக்கத்தினர் கைது செய்தனர்.
0 Kommentare:
Kommentar veröffentlichen