தன்னை முன்கூட்டி விடுதலை செய்யக் கோரி ராஜீவ் கொலை வழக்குத் தொடர்பில்
வேலூர் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நளினி தாக்கல் செய்த வழக்கில்
தமிழக அரசுக்கு மேற்கொண்டு அவகாசம் வழங்கப்பட மாட்டாது என சென்னை
மேன்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில், நளினிக்கு தூக்குத்தண்டனை
விதிக்கப்பட்டு, பின் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. 16
ஆண்டுகளுக்கும் மேல் சிறையில் இருப்பதால், முன்கூட்டி விடுதலை செய்ய
அரசிடம் நளினி கோரினார்.
அவரது மனு நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து, சென்னை மேன்நீதிமன்றில் நளினி
மனு தாக்கல் செய்தார்.
மனுவை தள்ளுபடி செய்த மேன்நீதிமன்றம், முன்கூட்டி விடுதலை செய்ய
கோருபவரின் மனுவை பரிசீலிக்க சட்டப்படி ஆலோசனைக் குழுவை அமைக்க வேண்டும்
என அரசுக்கு உத்தர விட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து, மேன் நீதிமன்றில் ஜனதா கட்சித் தலைவர்
சுப்ரமணியசாமி மனு தாக்கல் செய்தார்.
இதற்கிடையில், முறைப்படி ஆலோசனைக் குழுவை தமிழக அரசு நியமித்தது.
இந்நிலையில், நளினி மற்றும் சுப்ரமணியசாமி தாக்கல் செய்த மனுக்கள்
மேன்நீதிமன்றில் விசாரணைக்கு வந்தது. ஆலோசனைக் குழுவின் அறிக்கை அரசுக்கு
இன்னும் வரவில்லை என, நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, வழக்கு விசாரணை அவ்வப்போது தள்ளிவைக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், நேற்று முன்தினம் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது.
ஆலோசனைக் குழுவின் அறிக்கை இதுவரையில் வரவில்லை, என்பதால் இன்னும்
அவகாசம் வேண்டும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
விசாரணையை 10ஆம் திகதிக்கு தள்ளிவைத்த நீதிபதிகள், மேற்கொண்டு விசாரணையை
தள்ளிவைக்க முடியாது என தெரிவித்தனர்.
0 Kommentare:
Kommentar veröffentlichen