Freitag, 26. Februar 2010

யாரறிவார் வன்னிப் பெருந்துயரை..! துயர்1

1. இராணுவத் தேரும், அரசியற் குதிரையும், இராஜதந்திரப் பாகனும்.




'அனைத்தும் அரசியலுக்கு கீழ்ப்பட்டவை. எல்லாவற்றையும் அரசியலாகப் பார்' என்று அரசியல் பற்றி தத்துவஞானி ஒருவரால் கூறப்பட்ட மகுட வாக்கியம் அரசியல் நுழைவாயிலுக்கான அகரமாய் உள்ளது.



யுகம் கடந்த விஞ்ஞானியான அயன்ஸ் ரீனே அணுகுண்டின் பிதாமகனாய் இருந்த போதிலும், அணுகுண்டைப் பிரயோகிப்பது பற்றிய தீர்மானத்தை அரசியல்வாதியே எடுக்கின்றான். எப்படியோ விஞ்ஞானம் அரசியலுக்கு கீழ்ப்பட்டும், கட்டுப்பட்டுமே இயங்க வேண்டியுள்ளது.



'சட்டிக்குள் மசியும் கீரைக்குள்ளும் அரசியல் உண்டு' என்ற வாக்கியம் மிகவும் கருத்துக்கு எடுக்கப்படக் கூடியது. அதாவது கீரைக் கறிக்குள் அரசின் வரியிருக்கின்றது. நிலவரி தொடக்கம் தானிய வரி உட்பட சந்தை வரியீறாக கீரைக்குள் அரசியல் இருப்பதைக் காணலாம். பிறப்புப் பதிவது தொடக்கம் இறப்புப் பதிவது வரை, மணம் செய்வது தொடக்கம் பிரசவிப்பது வரை, வாழ்வு அரசியற் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டிருப்பதையே காணலாம். ஆதலால் எதனையும் அரசியலாகப் பார்க்கும் அணுகு முறை எதிலும் தலையாயது.



விஞ்ஞானமாயினும் சரி, இராணுவமாயினும் சரி அவை எதுவும் அரசியற் தீர்மானத்திற்கு கட்டுப்பட்டவையாகும். நடந்து முடிந்த தமிழின வன்னிப் பேரழிவை வெறுமனே இராணுவ அர்த்தத்தில் புரிந்து கொள்ளாமல், அதிகம் அரசியல் அர்த்தத்தில் புரிந்து கொள்ள வேண்டும். சிங்கள அரசின் வெற்றி ஓர் இராணுவ வெற்றியல்ல. உண்மையில் அது சிங்கள அரசின் ஓர் அரசியல் இராஜதந்திர வெற்றியே ஆகும். அவர்களது இராணுவ வெற்றியானது அவர்கள் தடம் அமைத்த அரசியல் வியூகத்துள் நிகழ்ந்த வெற்றியாகும்.



பார்வைக்கு சிங்கள அரசின் வெற்றி இராணுவ வெற்றி போல் தோன்றினாலும், உண்மையில் அது அவர்களுக்கோர் அரசியல் வெற்றியாகவும், தமிழர் தரப்புக்கோர் அரசியல் தோல்வியாகவுமே அமைந்துள்ளது. இராணுவத் தேரை சிங்களத் தலைவர்கள் அரசியற் குதிரை பூட்டி இராஜதந்திர சாரியால் சவாரி செய்துள்ளார்கள். பார்வைக்கு தேர் வென்றது போல தோன்றினாலும், உண்மையில் குதிரையின் பாய்ச்சலே பிரதானமானது. மகாபாரத யுத்தத்தில் கிருஷ்ணர் தனது அக்குரோணி சேனைகள் அனைத்தையும் துரியோதனனிடம் கொடுத்துவிட்டு, தான் மட்டும் தேரோட்டியாய் பாண்டவர் பக்கம் நின்றதாகக் கூறப்படும் அந்த ஐதீகக் கதையில் அரசியல் அர்த்தம் இருக்கின்றது. இக்கதை வரலாறு அல்லாத ஓர் ஐதீகமேயாயினும் இதன் அரசியல் அர்த்தம் கவனத்திற்குரியது. தேர்ச் சாரதியின் பக்கமே வெற்றி பெற்றதாக கதை முடிகிறது.



சிங்களத் தலைவர்களிடம் பிரபாகரன் மட்டும் தோற்கவில்லை என்றும், பல நூற்றாண்டுகளாக தமிழ் தலைமைகள் அனைத்துமே தோல்வியடைந்து வருகின்றன என்றும் கூறப்படுவதுண்டு. இராமநாதன்கள் முதல் செல்வநாயகங்கள் ஈறாக பிரபாகரன்கள் வரை தொடர்ந்து ஈழத்தமிழர் தோல்வியடைந்து வருகின்றனர் என்றும் கூறப்பட்டு வரும் பிரபலமான அரசியல் கூற்றானது அதிகம் கருத்தில் எடுக்கத் தக்கதாகும்.



'காலில் கல்லடித்து விட்டது என்பதை விடவும், கால் கல்லுடன் மோதிவிட்டது' என்று கூறுவதன் மூலம் காயத்திற்கான தன் பக்க நியாயத்தை கண்டறியும் அணுகுமுறையை கருத்தில் எடுத்தலும் அவசியம்.



எம்மத்தியில் நிகரற்ற வீரம் வெளிக்காட்டப்பட்டது, அளப்பெரிய தியாகம் புரியப்பட்டது, சொல்லிடவியலா அர்ப்பணிப்பும் காணப்பட்டது. ஆயினும் எம்மைச் சிங்கள அரசே நூற்றாண்டுக் கணக்காய் வெற்றி கொள்ளும் வரலாறு நீடிக்கிறது. எமது தலைமுறையில் இதற்கு ஒரு முடிவு கட்டியாக வேண்டும்.



இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வல்ல, இராணுவத்தீர்வே இறுதியானது எனக் கூறியோர் அரசியல் வியூகத்தால் சுற்றிவளைத்து இராணுவச் சப்பாத்துக்களுக்குள் தமிழரைக் கொண்டு வந்துவிட்டார்கள். குதிரையின் முதுகில் ஏறியிருந்து அதன் தலையைத் தடவி சவாரி செய்வது போல் இப்போது தமிழரின் முதுகில் ஏறிநின்று தலையைத் தடவுகிறார்கள். இராணுவச் சப்பாத்துக்களையே தமிழருக்கு பானம் பண்ணுவதற்கான பாத்திரமாக கையளிக்கிறார்களே தவிர, கௌரவமான வேறு எவ்வகைத் தங்க, வெள்ளி பாத்திரங்களையும் தீர்வாக கையளிக்கப் போவதில்லை.



வன்னித் தமிழனப் படுகொலை யுத்தத்தில் 90,000 மக்களைக் காணவில்லை. 2006 ஆம் ஆண்டில் யுத்தம் தொடங்கிய போது அங்கு 3,80,000 பேர் இருந்ததாக அரசாங்க உத்தியோகபூர்வ அறிக்கைகள் கூறுகின்றன. இதனை பல அரசாங்க உயர் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். ஆனால் யுத்தம் முடிந்து தடுப்பு முகாமில் 2,70,000 பேர் இருப்பதாக அரசு உத்தியோகபூர்வமாக அறிவித்தது. பின்பு 2,61,000 பொதுமக்களும், 11,000 சரணடைந்த போராளிக் கைதிகளும் இருப்பதாக இறுதியாக அறிவித்தது. அதாவது தடுப்பு முகாங்களில் இருந்து பின்பு பிடிக்கப்பட்ட இளைஞர், யுவதிகள் தொகையுடன் இத் தொகை இவ்வாறு அறிவிக்கப்பட்டது.



சரணடைந்த போராளிகளுள் ஒரு பெரும் தொகையினர் வன்னியின் கணக்குக்கு வெளியிலே இருந்து ஏற்கனவே இணைந்து போராளிகளாய் இருந்தோரும் அடங்குவர். எப்படியோ 3,80,000 பேருக்கு நாம் கணக்குக் கண்டாக வேண்டும். எஞ்சி இருக்கும் 2,70,000 பேருக்கும் அப்பால் (போராளிகள் தொகை உள் நீங்கலாகவோ அன்றி புற நீங்கலாகவோ என்ற சர்ச்சை ஒரு புறம் இருக்கட்டும்) 1,10,000 பேருக்கு கணக்குக் கண்டாக வேண்டும். இதில் குறைந்தது 90,000 பொது மக்கள் கொல்லப்பட்டுவிட்டனர் என்ற அபாயகரமான கணக்கு எமக்கு தெரியவரும். இன்றைய தகவல் யுகத்தில் படுகொலை செய்யப்பட்வர்களது சரியான தொகையை கண்டறிவதில் கஸ்டம் இருக்க மாட்டாது.



சமாதான காலத்தில் கட்டுமானப்பணி, நிர்வாகப்பணி போன்ற பணிகளின் அடிப்படையில் வன்னிக்கு வேலை தேடி வந்தவர்களும், அவர்களது குடும்பங்களும் என ஒரு பெரிய தொகையின் கணக்கு உள்ளது. இத்தொகையினர் எத்தகைய அரசாங்கப் பதிவுகளிலும் இல்லை. மேலும் பிள்ளைகள் இயக்கத்தில் போராளிகளாக இருப்பதன் பெயரில் வன்னிக்கு வெளியே இருந்து உள்வந்தோரும், இராணுவ அச்சுறுத்தலுக்கு அஞ்சி அவ்வாறு உள்வந்தோரும் என அரச பதிவுக்குட்படாத இன்னொரு தொகையினரும் உண்டு.



மேலும் படுகாயம் அடைந்திருப்போர், வீட்டுக்கு வீடு மரணமடைந்திருப்போர், தம் சொத்துக்களையும் குடியிருப்புக்களையும் இழந்திருப்போர் என பாதிப்பின் பரிதாபம் வன்னிக்குள் நீடிக்கும் அதேவேளை வன்னிக்கு வெளியே உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் வாழ்வோர் வன்னியில் மாண்டு போன தமது சொந்தங்களால் துயருறும் அளவும் கருத்திற்கெடுக்க வேண்டிய பெரும் கணக்குகளாகும். அதாவது வன்னிப் படுகொலையால் பாதிக்கப்படாதவன் என்று ஒரு தமிழன் இருக்க முடியாத அளவிற்கு வன்னிப் படுகொலையின் கொரூரம் அமைந்துள்ளது.



சிங்கள அரசியல் கலாச்சாரத்தின் படி தமிழ் மக்களுக்கு எந்தவித நியாயமான தீர்வையும் அவர்களிடம் எதிர்பார்க்க முடியாது. அரசியல் மதிப்பீட்டில் கலாச்சாரத்தின் வலிமை முக்கியமானது. இந்தியாவின் கருவியாக தமிழரைப் பார்ப்பதன் வெளிப்பாடாகவே தமிழருக்கு எதிரான சிங்கள இனவாத அரசியல் காணப்படுகிறது. எனவே சிங்கள அரசியல் கலாச்சாரம் என்பது இந்திய எதிர்ப்பின் அடிப்படையிலான தமிழின எதிர்ப்பாக உள்ளது. இந்த வகையில் தமிழரை ஏமாற்றுவதை, தமிழரைத் தோற்கடிப்பதை, தமிழரை அழிப்பதை தமது அரசியற் கலாச்சாரமாக சிங்கள இனவாதிகள் கொள்கின்றனர். ஆதலால் அவர்களிடம் இருந்து தமிழர்கள் தமக்கு உரியதான உரிமைகள் எதனையும் ஒரு போதும் எதிர்பார்க்க முடியாது. சிங்கள தலைவர்களிடம் இருந்து நன்மையை எதிர்பார்ப்பதானது கண்களை கறுப்புத் துணிகளால் இறுக்கிக் கட்டிக் கொண்டு வானவில்லை ரசிப்பதற்கு ஒப்பானது. இது ஈழத்தமிழருக்கு மட்டுமல்ல இந்திய அரசுக்கும் பொருந்தும்.



இருப்பதில் இருந்துதான் அடுத்ததைத் தேடவேண்டும் என்பதற்கு இணங்க இராஜதந்திர அணுகுமுறைகளை நாம் நிராகரிக்கப் போவதில்லை. ஆதலால் சிங்களத் தலைவர்களிடம் எதையாவது எதிர்பார்ப்பதாயின் மேற்கண்ட விளக்கமும் அதற்கு பின்னணியாய் இருக்க வேண்டியது அவசியம். எமது மக்களை ஆயிரக்கணக்கான ஆண்டு கால தோல்வியில் இருந்து விடுவிக்க நாம் நல்மனத்துடனும், ஐக்கிய உணர்வுடனும், ஜனநாயக எண்ணங்களுடனும் பரந்துபட்ட மனித நேயச் சிந்தனையுடனும் செயற்பட வேண்டியது அவசியம்.



11.01.2010 இரவு 8:30



2. புள்ளிவிபரங்கள் இரத்தம் சிந்தாது



வன்னி மண்ணுக்கென ஒரு தனிமிடுக்கு வரலாற்றில் உண்டு. 1995 ஆம் ஆண்டு 'றிவரஷ' இராணுவ நடவடிக்கையைத் தொடர்ந்து யாழ்ப்பாண மக்களும், மட்டக்களப்பு மக்களும் வன்னி மண்ணில் வன்னி மாந்தருடன் சங்கமிக்கத் தொடங்கினர். அந்த சங்கமிப்பில் மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா மாவட்டங்கள் திரண்டு இலட்சக் கணக்கில் வன்னி மக்கள் என அழைக்கப்படலாயினர். இந்த மக்களே ஒன்றரை தசாப்த காலமாய் யுத்தத்திற்கு நேரடியாய் முகங்கொடுப்போர் ஆயினர். வெளியுலகில் இருந்து பிரித்து அறுக்கப்பட்ட வன்னிக்கு உலகம் இருண்டிருந்தது. வெளியுலகின் கண்ணிற்கு ஒரு பாதாள உலகாய் அது காட்சியளித்தது. நெருக்கடிகள், துன்பங்கள், இழப்புக்கள், அர்ப்பணிப்புக்கள், தியாகங்கள் என்பனவற்றிற்கு மத்தியில் எதிர்காலம் பற்றிய நம்பிக்கைக் கீற்றுடன் மக்கள் வாழ்ந்தனர்.



அரசு பொருளாதாரத் தடைகளை விதித்தது. வெளியுலகத்துடன் வன்னிக்கான தொடர்புகளை அறுத்தது. மருந்தில்லை, உரிய உணவில்லை, கல்வியில்லை, அறிவியல் கதவுகள் அனைத்தும் மூடப்பட்டன. வெறுமனே ஜீவாதார வாழ்வுக்கான அரிசி, பருப்பு என்பவற்றுடன் வன்னியின் கால்நடைகளும் மக்களைத் தக்கவைத்தன. அனைத்து சுமைகளும் மக்களின் தலைகள் மேல் சுமத்தப்பட்டன. எல்லாத் துயரங்களும் மக்களுக்கே என்ற நிலை ஏற்பட்ட போதிலும் மக்கள் சளையாது துயரத்திற்கு முகம் கொடுத்தனர்.



வன்னி அடையாள அட்டை என்றாலே அவர்கள் பாவக்கிரகத்து தீண்டத்தகாத மக்கள் என அரசு முத்திரை குத்தியது. உணவுத் தடையாலும், பொருளாதாரத் தடைகளாலும், மருத்துவத் தடைகளாலும் மற்றும் பெரும் இயற்கை நோய்களாலும் துயரத்திற்கு தள்ளப்பட்ட மக்கள் மீது விமானக் குண்டுகள் வீழ்ந்து வெடித்தன. எறிகணைகள் மக்களை பதம் பார்த்தன. இராணுவ நடவடிக்கைகள் மக்களை ஊர்விட்டு ஊர் துரத்தின. மரணம் வீட்டுக்கு வீடு தவறாது நிகழ்ந்தது.



போராளிகளாய் பிள்ளைகள் யுத்தகளத்தில் சமராடினர். பெற்றோரும் மற்றோரும் யுத்தகளங்களில் பதுங்குகுழி அமைப்போராய் எந்நேரமும் மரணத்தை தழுவுவோராய் காணப்பட்டனர். இத்தனை துயரங்களின் மத்தியிலும் அவர்கள் மனம் சலிக்கவில்லை.



தாங்க முடியாத பொருளாதார சுமைகளும், யுத்த சுமைகளும் அவர்களின் முதுகை ஒன்றரை தசாப்தமாய் அழுத்திக்கொண்டே இருந்தது. குறைந்த வளத்துடனும் இத்துணை நெருக்கடிகளுடனும் மக்கள் வாழ்ந்த போதிலும் அவர்கள் அன்புக்கு குறைவற்றோராய் இலட்சியப் பற்றுமிக்கோராய் போராட்டத்தை நேசிப்போராய்க் காணப்பட்டனர்.



முழுத் தமிழீழ மக்களின் போராட்டச் சுமையையும் வன்னியில் வாழ்ந்த 4,00,000 மக்களே பெரிதும் சுமந்தனர். சிங்கள ஆட்சியாளர்கள் தாம் கொண்டிருந்த முழு அளவிலான இந்திய எதிர்ப்பையும், தமிழின எதிர்ப்பையும் 4,00,000 வன்னிமக்கள் மீதே முழுமையாய் பிரயோகித்தனர். வன்னியின் வீழ்ச்சி தமிழரின் வீழ்ச்சியாயும், தமிழரின் வீழ்ச்சி எதிர்காலத்தில் இந்தியாவின் வீழ்ச்சியாகவும் அமையக்கூடிய அபாயம் உண்டு.



இவ்வாறு புரிந்துகொண்டால் வன்னி மக்கள் இப்பிராந்தியத்தின் சமாதானத்தையே தம் முதுகில் சுமந்திருக்கிறார்கள் என்ற உண்மையை வரலாறு எதிர்காலத்தில் தெரிந்து கொள்ளும். இக்கருத்துப் பின்னணியில் வன்னிப் படுகொலையை நாம் பார்க்க வேண்டும்.



கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான மக்களையும், ஒன்றரைத் தசாப்தமாய் தொலைந்து போன அவர்களது வாழ்வின் வசந்தங்களையும், மறைந்து போன பிஞ்சுகளையும், இளசுகளையும் அவர்களின் அபிலாசைகளையும் புரிந்து கொள்ள எமக்கு ஓர் இதயம் வேண்டும். 'புள்ளிவிபரங்கள் இரத்தம் சிந்தாது' என்ற கூற்றுக்கிணங்க புள்ளிவிபரங்களைக் கடந்து துயரங்களைப் புரிந்து கொள்ளக் கூடிய ஒரு மனமும் அதற்கான ஒரு பண்பட்ட உள்ளமும் வேண்டும்.



எல்லா வெற்றிக்கும் தளமாய் அமைந்தவர்கள், எல்லாச் சுமையையும் முதுகில் சுமந்தவர்கள், தோல்வியின் வாயில் இரையாய்ப் போயினர். யாரறிவார் வன்னி மண்ணின் பெரும் துயரை....!



11.01.2010 இரவு 10:00



3. சிங்கள இராணுவத்தின் பாலியல் சுகபோக முகாம்.



யாராலும் இதுவரை முக்கியத்துவப்படுத்தப்பட்டிராத சிங்கள இராணுவத்தின் செயல் திட்டம் ஒன்று இங்கு கவனத்திற்குரியது. பெண் போராளிகளை உயிருடன் கைப்பற்றுவதும், அவர்களை சிங்கள இராணுவத்தினரின் பாலியல் தேவைக்கு பலாத்காரமாய் பயன்படுத்துவது என்பதுமே அத்திட்டமாகும்.



இரண்டாம் உலக மகா யுத்த காலத்தில் தாம் வெற்றி கொண்ட இடங்களில் பெண்களை கைது செய்து தமது இராணுவத்திற்கான சுகபோக முகாங்களை யப்பானிய இராணுவம் அமைத்துக் கொண்டது. இதுவரை இது உலகில் மிகப் பெரும் கண்டனத்திற்குரிய மனிதாபிமான பிரச்சினையாய் உள்ளது. (Japanese military comfort women) http://www.museology.org/japan.html. அதனைவிடவும் மோசமான முறையில் 21ஆம் நூற்றாண்டில் சிங்கள பௌத்த இராணுவம் தமக்கென சுகபோக முகாம் திட்டம் ஒன்றைச் செயற்படுத்தியுள்ளது.



காவல் கொட்டில்களிலும், எல்லைக் காவல் நிலையங்களிலும், யுத்த களங்களிலும் மற்றும் சுற்றி வளைப்புகளிலும் பெண் போராளிகளை இராணுவம் தமது இராணுவ உத்திகளைப் பயன்படுத்தி உயிருடன் பிடிப்பதில் அக்கறையாய் இருந்துள்ளது. அவ்வாறு பிடிக்கப்படும் பெண்களை முழு நிர்வாணமாகவே எப்போதும் அவர்கள் வைத்திருந்துள்ளனர்.



பெண் போராளிகளை இவ்வாறு அவர்கள் பிடித்ததும், தாம் பலாத்காரம் புரியப்போகும் செய்தியை எல்லையில் இருக்கும் ஏனைய ஆண் போராளிகளுக்கு அறிவித்துவிட்டு அவர்களது வோக்கிரோக்கியில் கேட்கக் கூடியவாறு பெண்கள் மீது பலாத்காரத்தைப் புரிவார்கள். அப்போது பெண்களின் அந்த அலறல் ஒலிகளை ஆண் போராளிகளுக்கு வோக்கிரோக்கி வாயிலாக கேட்கச் செய்துவிட்டு தமது அட்டகாசமான வார்த்தைப் பிரயோகங்களை சிங்களத்திலும், தெரிந்த தமிழிலும் பேசிக்காட்டுவார்கள். அவ்வாறு இராணுவத்தினர் பேசும் போதும் இழிவான வார்த்தைகளையும், தமது குதூகலத்தையும் வெளிப்படுத்துவது வழக்கம்.



இரட்டைவாய்கால் படுகொலைக் காலத்தில் படகின் மூலம் தப்பியோடிய போது ஒரு போராளியின் மனைவி படையினரால் பிடிக்கப்பட்டார். அப்பெண்ணை பற்றிய ஒரு நேர்முகப் பாலியல் வர்ணனையை வானொலியில் துடுப்பாட்ட வர்ணனை (commentary) சொல்வது போல கொச்சைத் தமிழில் வோக்கி வாயிலாக படையினர் செய்தனர். வன்னி வாய் பேசத் தொடங்கும் போது இத்தகைய கொரூரங்கள் மேலும் மேலும் வெளிவரும். இராணுவத்தினரே தமது ரசிப்புக்காக இவற்றை ஒளிநாடாக்களாக வைத்துள்ளதுடன் இவற்றை அவர்கள் வெளியிலும் பரவவிட்டுள்ளார்கள்.



பூலான்தேவியை தாகூர்கள் தமது வீட்டில் நிர்வாணமாக பணியாற்றச் செய்தது போன்ற சில சம்பவங்களை மட்டும் கேட்டு கண்ணீர் விட்ட எமது இதயங்கள் எமது தமிழ் பெண்களுக்கு நடந்திருக்கும் வெளிவராத இக்கதைகள் வெளிவரும் போது ஒரு பூலான்தேவியென்ன அதைப் போல் ஆயிரக்கணக்கான பூலான்தேவிகளை நாம் கண்ட துயரம் எமது மனங்களில் வடுவாய் வளரும். யாரெல்லாம் இதற்கு பதில் சொல்வார்கள்?



புனைகதைகளும், கற்பனைத் திரைப்படங்களும் கண்டிராத பெரும் பாலியல் கொடுமைகளும்; சித்திரவதைகளும் பௌத்தம் பேசும் இலங்கைத் தீவில் ஈழத்தமிழ் பெண்கள் மீது அரங்கேறியுள்ளன. ஊடகவியலாளர்களும், தகவல்பட தயாரிப்பாளர்களும், புலனாய்வு நிபுணர்களும், அறிவியல் ஆய்வாளர்களும், மனித உரிமை ஆர்வலர்களும் முனைப்புடன் ஈடுபட்டு இத்தகைய மனித குல விரோத பாலியல் கொடுமைகளையும், அநாகரிகங்களையும் வெளிக்கொணரும் காலம் வெகு தூரத்தில் இருக்காது என்று நீதி நியாயத்தின் பெயராலும், தர்மத்தின் பெயராலும், ஜனநாயகத்தின் பெயராலும் நம்புவோமாக. http://www.ponguthamil.com/ShowImage.aspx?ContentID={1B3E405B-3D40-4882-9212-23CA5E9EDD2C}



--

வெட்ட வெட்டத் தழைப்போம்!



பிடுங்கப் பிடுங்க நடுவோம்!!



அடிக்க அடிக்க அடிப்போம்!!!



அடைக்க அடைக்க உடைப்போம்!!!!



அழிக்க அழிக்க எழுதுவோம்!!!!



விழ விழ எழுவோம்!!!!



தமிழரின் தாகம், தமிழீழத் தாயகம்
  • மேலதிக செய்திகளுக்காக
  • 0 Kommentare:

    Kommentar veröffentlichen