Dienstag, 29. Dezember 2009

“எங்களால் அவர்களை நம்ப முடியாது!”



“எங்களால் அவர்களை நம்ப முடியாது!”


- கிஷேன்ஜி,

அரசியல் தலைமைக் குழு உறுப்பினர்,

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்)

இந்தியக் கம்யூனிஸ்ட் (மாவோயிஸ்ட்) கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் கிஷேன்ஜி என அழைக்கப்படும் 53 வயதான மல்லோஜுலா கோட்டீஸ்வர ராவுடன் தெகல்காவுக்காகப் பத்திரிகையாளர் துஷா மிட்டல் தொலைபேசியில் எடுத்த நேர்காணலில் இடம்பெற்றுள்ள பகுதி இது. நவம்பர் 21, 2009 தெகல்கா இதழில் இந்நேர்காணல் பிரசுரமாகியிருக்கிறது. லால்கரில் அமைந்துள்ள காவல் துறை முகாம் ஒன்றிலிருந்து ஒன்றரை கி.மீ. தொலைவில் உள்ள காட்டுப் பகுதியில் கிஷேன்ஜி தலைமறைவாக இருப்பதாகத் தெகல்கா தெரிவிக்கிறது.

துஷாமிட்டல்: வன உரிமைகள், நிலங்களைக் கையகப்படுத்துதல், சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அமைப்பது தொடர்பான பிரச்சினைகள் குறித்து உங்களுடன் பேச்சு நடத்த உள்துறை அமைச்சர் ஒப்புக்கொண்டிருக்கிறார். அவரது அழைப்பை ஏன் நிராகரித்தீர்கள்? அவர் உங்களை வன்முறையை நிறுத்திவைக்குமாறுதானே கேட்கிறார்.

கிஷேன்ஜி: அரசுப் படைகளைத் திரும்ப அழைத்துக் கொள்ளும்பட்சத்தில் பேச்சுவார்த்தைக்கு நாங்கள் தயாராகவே இருக்கிறோம். வன்முறை எங்கள் செயல் திட்டத்தின் பகுதி அல்ல. நாங்கள் நடத்துவது எதிர்த் தாக்குதல் மட்டுமே. சிறப்புப் படை எங்கள் மக்களை நாள்தோறும் தாக்கிக்கொண்டிருக்கிறது. சென்ற மாதம் மட்டும் பாஸ்த்தரில் கோப்ரா படையினர் அப்பாவிப் பழங்குடியினரில் 18 பேரையும் 12 மாவோயிஸ்ட்டுகளையும் கொன்றிருக்கிறார்கள். சத்தீஷ்கரில் நாங்கள் மேற்கொண்டுள்ள வளர்ச்சிப் பணிகளுக்கு உதவுபவர்கள் கைதுசெய்யப்படுகிறார்கள். இதை நிறுத்துங்கள், வன்முறையும் நின்றுவிடும். சமீபத்தில் சத்தீஷ்கர் மாநிலக் காவல் துறைத் தலைவர் சால்வா ஜூடும் அமைப்புக்காக 6000 பேரைப் புதிதாகப் பணியில் சேர்த்திருக்கிறார். அந்த அமைப்புக்குப் புதிய ஆட்ளைத் தேர்வுசெய்யும் பணி தொடர்ந்துகொண்டிருக்கிறது. அந்த அமைப்பினர் பழங்குடியினரைக் கொலைசெய்கின்றனர், பாலியல் வன்முறைகளில் ஈடுபடுகின்றனர், அவர்களைச் சூறையாடுகின்றனர். பல பழங்குடிக் கிராமங்களை அந்த அமைப்பினர் சிதைத்துவிட்டிருக்கின்றனர். அரசு தான் விரும்புவதுபோல் என்ன வேண்டுமானாலும் சொல்லிக்கொண்டிருக்கட்டும். அவர்களை நாங்கள் நம்ப முடியாது.

எத்தகைய நிபந்தனையின் கீழ் நீங்கள் வன்முறையைக் கைவிடுவீர்கள்?

பழங்குடி மக்களிடம் பிரதமர் மன்னிப்புக் கேட்க வேண்டும், எங்களுடைய பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ள படைகளை விலக்கிக்கொள்ள வேண்டும். கைதுசெய்யப்பட்டவர்கள் அனைவரையும் விடுவிக்க வேண்டும். படைகளை விலக்கிக்கொள்வதற்குத் தேவையான அவகாசத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அதுவரை தாக்குதல் நிறுத்தப்படுவதற்கான உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும். அரசு இதை ஒப்புக்கொள்ளுமானால் வன்முறையைக் கைவிடுவதற்கு நாங்கள் தயாராகவே இருக்கிறோம்.

அரசுப் படைகளைத் திரும்ப அழைத்துக்கொள்வதற்கு ஒப்புக்கொள்ளும் முன்பாகவே தாக்குதலை ஒரு மாதம்வரை நிறுத்திவைப்பதாக ஒரு உத்தரவாதத்தை உங்களால் அளிக்க முடியாதா?

நாங்கள் அதைப் பரிசீலிப்போம். நான் எங்கள் அமைப்பின் பொதுச்செயலாளரோடு பேச வேண்டும். அந்த ஒரு மாதத்தில் படையினர் தாக்குதலில் ஈடுபட மாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்? அரசு முறையாக அதை அறிவித்துவிட்டுப் படைகளைத் திரும்ப அழைத்துக்கொள்ளும் பணியைத் தொடங்கட்டும். அது வெறும் நாடகமாக இருந்துவிடக் கூடாது, ஆந்திரப் பிரதேசத்தில் நடந்ததுபோல. அங்கு அவர்கள் பேச்சுவார்த்தையைத் தொடங்கினார்கள், பிறகு நிறுத்திவிட்டார்கள். எமது மத்தியக் கமிட்டி உறுப்பினர் அரசுச் செயலரைச் சந்திப்பதற்காகச் சென்றார். பேச்சு வார்த்தைக்கு முன்வந்த அவரைக் காவல் துறை சுட்டுக்கொன்றது.

மக்கள் நலன் உங்களது செயல்திட்டம் என்றால் நீங்கள் ஏன் ஆயுதங்களை வைத்துக்கொண்டிருக்க வேண்டும்? உங்களுடைய இலக்கு பழங்குடியினர் நலனா அரசு அதிகாரமா?

அரசு அதிகாரம்தான். பழங்குடியினர் நலனுக்கு நாங்கள் முன்னுரிமை அளிக்கிறோம். ஆனால் அரசு அதிகாரம் இல்லாமல் எங்களால் எதையும் சாதிக்க முடியாது. ராணுவமோ ஆயுதமோ இல்லாமல் யாராலும் அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்ள முடியாது. அரசியல் அதிகாரம் இல்லாததன் காரணமாகவே பழங்குடியினர் சுரண்டப்படுகின்றனர், விளிம்புநிலைக்குத் தள்ளப்படுகின்றனர். அவர்களது சொந்த நிலங்களின் மீது இப்போது அவர்களுக்கு எந்த உரிமையுமில்லை. எனினும் எங்கள் தத்துவம் ஆயுதங்களைக் கோருவது அல்ல. ஆயுதங்களை நாங்கள் இரண்டாம்பட்சமானதாகவே வைத்திருக்கிறோம்.

முதலில் வன்முறையைக் கைவிடுமாறு அரசு உங்களைக் கோருகிறது. முதலில் படைகளைத் திரும்ப அழைத்துக்கொள்ளுங்கள் என நீங்கள் அவர்களைக் கேட்கிறீர்கள். இத்தகைய அபத்தமான சூழலில் நீங்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் பழங்குடியினரே அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.

அப்படியானால் சர்வதேச அளவிலான நடுநிலையாளர்களை அழையுங்கள். ஆந்திரப் பிரதேசத்திலாகட்டும், மேற்கு வங்காளத்திலாகட்டும் அல்லது மராட்டியத்திலாகட்டும் நாங்கள் ஒருபோதும் வன்முறையைத் தொடங்கவில்லை. முதல் தாக்குதல் அரசிடமிருந்து தான் வந்தது. மேற்கு வங்காளத்தில் ஆளும் மார்க்சிஸ்ட் கட்சித் தொண்டர்கள் தமது செல்வாக்குக்குட்பட்ட பகுதிகளுக்குள் யாரும் நுழையக் கூடாது என்கிறார்கள். லால்கரில் 1998இலிருந்து காவல் துறைத் தாக்குதல் நடந்துகொண்டிருக்கிறது.

வன்முறை உங்கள் செயல்திட்டத்தில் இல்லை என்கிறீர்கள். ஆனால் கடந்த நான்காண்டுகளில் நீங்கள் 900 காவல் துறையினரைக் கொன்றிருக்கிறீர்கள். அவர்களில் பலர் ஏழைப் பழங்குடிக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். அது பதில் வன்முறையாகவே இருக்கட்டும். அதன் மூலம் எப்படி நீங்கள் உங்கள் இலக்கை எட்ட முடியும்?

எங்கள் போராட்டம் அரசுடனானது, காவல் துறையுடனானது அல்ல. காவல் துறை மரணங்களை எங்களால் முடிந்த அளவுக்குக் குறைக்கிறோம். மேற்கு வங்காளத்தில் உள்ள பல காவல் துறைக் குடும்பத்தினர் எங்கள் அனுதாபிகள். கடந்த 28 ஆண்டுகளில் மார்க்சிஸ்ட் கட்சியினர் 51000 அரசியல் கொலைகளை நிகழ்த்தியிருக்கிறார்கள். நாங்கள் கடந்த ஏழு மாதங்களில் அவர்களில் 52 பேரைக் கொன்றிருக்கிறோம். அரசு, மார்க்சிஸ்ட்டுகளின் அராஜகங்களுக்குப் பதிலடியாகவே நாங்கள் இதைச் செய்தோம்.
  • மேலதிக செய்திகளுக்காக
  • 0 Kommentare:

    Kommentar veröffentlichen