Dienstag, 29. Dezember 2009

ஜனாதிபதித் தேர்தல்- 2010 முக்கிய திருப்பங்கள் நிகழுமா?


இலங்கையின் தேர்தல் வரலாற்றிலேயே அதிக வேட்பாளர்கள் போட்டியிடும் ஜனாதிபதித் தேர்தல் 2010 யனவரி 26ம் திகதி நடைபெற்றவுள்ளது.




கடந்த 17ம் திகதி வேட்புமனுக்கள் கையேற்கப்பட்ட பின்னர் ஒருவரின் மனு நிராகரிக்கப்பட்டதை அடுத்தே 22 வேட்பாளர்கள் களத்தில் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இலங்கையின் தேர்தல வரலாற்றில் இந்தத் தேர்தல் பல்வேறு விடயங்களில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.



சுதந்திரம் பெற்ற காலம் தொடக்கம் அனைத்துத் தேர்தல்களிலும் போட்டியிட்டு வந்த ஐதேக முதல்முறையாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடாமல் பொதுவேட்பாளர் ஒருவரை ஆதரிக்கும் நிலைக்கு வந்திருக்கிறது. அத்துடன் முன்னெப்போதும் இல்லாதளவுக்கு இந்தத் தேர்தல் நெருக்கமான போட்டியைக் கொண்டதாக இருக்கலாம் என்ற கருத்தும் காணப்படுகிறது.



இரண்டு பிரதான வேட்பாளர்களும் பலம் பொருந்தியவர்களாக இருப்பதாகல்- இந்தத் தேர்தல் அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது. அதிகளவு வேட்பாளர்கள் போட்டியிடும் தேர்தல் என்ற வகையில் இந்தத் தேர்தல் முடிவு இன்னொரு கடத்துக்கு சென்றாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.அதாவது இலங்கையின் தேர்தல் சட்டங்களின்படி வேட்பாளர் எவரும் 50 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெறத்தவறினால் இரண்டாவது விருப்புரிமை வாக்குகளை எண்ண வேண்டும்.



இந்த ஜனாதிபதித் தேர்தலில் பல குழப்பங்கள் காணப்படுவதால் இரண்டாவது விருப்புரிமை வாக்குகளை எண்ணும் நிலை ஏற்படுவது ஆச்சரியத்துக்குரிய ஒன்றாக இருக்கப் போவதில்லை.இது இலங்கையின் தேர்தல் முறையைப் பொறுததவரையில் புதியதொரு விடயமாகவே இருக்கும்.ஏனெனில் இதுவரையில் இரண்டாவது விருப்புரிமை வாக்குகளை எண்ணும் நிலை ஒருபோதும் ஏற்பட்டதில்லை. அத்துடன் இதுவரையில் நடந்த ஜனாதிபதித் தேரதல்களில் அதிகபட்சமாக 13 வேட்பாளர்களே போட்டியிட்டுள்ளனர். 1999இலும், 2005இலும் மட்டுமே 13வேட்பாளர்கள் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டிருந்தனர். குறைந்தபட்சமாக மூன்று வேட்பாளர்கள் போட்டியிட்டது 1988இல் நடந்த ஜனாதிபதித் தேர்தலின் போதாகும். ஆனால் அடுத்த வருடம் நடக்கப் போகும் தேர்தலில் 22வேட்பாளகள் களமிறங்கியிருப்பது முக்கியமான விடயம்.

பிரதான வேட்பாளர்களான மகிந்த ராஜபக்ஸ அல்லது சரத் பொன்சேகா- இவர்களில் எவராவது ஒருவரே இந்தத் தேர்தலில் வெற்றி பெறப் போகிறார். இது இந்தத் தேர்தலில் போட்டியிடும் ஏனைய 20 வேட்பாளர்களுக்கும் நன்றாகவே தெரியும். ஆனாலும் அவர்கள் போட்டியிடுவதற்குப் பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. அதில் முக்கியமானது வாக்குகளைப் பிரிப்பது. அடுத்தது எந்த அணிக்கும் தாம் சார்ந்த அணியின் வாக்குகள் கிடைத்து விடக் கூடாது என்ற நோக்கம்.



பொதுவாகப் பார்க்கும்போது மகிந்த ராஜபக்ஸவுக்கு எதிரான வாக்குகள் சரத் பொன்சேகாவுக்கு கிடைத்து விடக் கூடாதெனக் கருதுவோர் சார்பிலும்





சரத் பொன்சேகாவை ஆதரிக்க விரும்பாத ஐதேகவினர், ஜேவிபியினரின் வாக்குகள் மகிந்தவுக்கு கிடைத்து விடாத வகையிலும்





இரண்டு தரப்பையும் ஆதரிக்க விரும்பாதவர்கள் தமது வாக்குகளை யாருக்குப் போடலாம் என்று எடை போட்டுப் பார்த்து விடக் கூடாதெனக் கருதும் வகையிலும் இந்தப் போட்டியில் அதிகளவானோர் குதித்துள்ளனர்.

அதிகளவு வேட்பாளர்கள் போட்டியிடுகின்ற போதும் பிரதான இரு வேட்பாளர்களைத் தவிர ஏனையோர் கட்டுப்பணத்தை இழக்காமல் காப்பாற்றிக் கொள்வார்களா? அல்லது ஆறு இலக்க வாக்குகளையாவது பெறுவார்களா? என்பது சந்தேகம் தான்.



இந்தத் தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகள் பெரிதும் முக்கியத்துவத்துடன் பார்க்கப்படுகிறது. காரணம் 1988ம் ஆண்டுக்குப் பிறகு தமிழ் மக்கள் அனைவரும் வாக்களிக்கக் கூடிய நிலையொன்று இப்போது தான் தோன்றியிருக்கிறது. போரில் கிடைத்த வெற்றியை மூலதனமாக்கிக் கொண்டு பிரதான வேட்பாளர்கள் போட்டியிடும் நிலையில்- இந்தப் போரால் பெரிதும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் தீர்ப்பு எவ்வாறு அமையப் போகிறது என்ற கேள்வியும் இருக்கிறது. குறிப்பாக வடக்கில் மட்டும் பத்து இலட்சம் வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பான்மையானோர் தமிழர்கள். அதுபோன்றே கிழக்கிலும் 2007ம் ஆண்டு சனத்தொகை மதிப்பீட்டின்படி 40 வீதமானோர் தமிழர்கள் என்பதால் அங்கு பதிவு செய்யப்பட்டுள்ள சுமார் பத்து இலட்சம் வாக்காளர்களில் குறைந்தது 4 இலட்சம் பேர் தமிழர்களாகவே இருக்கின்றனர். இந்த வகையில் வடக்கிலும் கிழக்கிலுமாக குறைந்தது 13 இலட்சம் தமிழ் வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதிபெற்றுள்ளனர். இதைவிட கொழும்பு மற்றும் பிற பகுதிகளில் வாழும் தமிழ் வாக்காளர்களும் இருக்கின்றனர். எனவே தமிழ் வாக்காளர்களின் முழுமையான ஆதரவை எந்த வேட்பாளர் பெறுகிறாரோ –அவர் நிச்சயம் வெற்றி பெறுவார் என்ற நிலையே காணப்படுகிறது. ஆனால் பிரதான வேட்பாளர்கள் தொடர்பாக தமிழ் மக்களிடம் சாதகமான கருத்து இல்லை.



தமிழ்மக்களின் வெறுப்பையும்- அதிருப்தியையும் இவர்கள் நிறையவே சம்பாதித்து வைத்திருக்கிறார்கள். இந்த நிலையில் தமிழ் மக்கள் எத்தகைய முடிவை எடுக்கப் போகிறார்கள் என்ற கேள்வி இருக்கவே செய்கிறது. இந்தநிலையில் தமிழர் தரப்பில் இருந்து சிவாஜிலிங்கம் சுயேட்சையாகப் போட்டியிட எடுத்துள்ள முடிவு இரு வேட்பாளர்களின் மீதும் வெறுப்புக் கொண்ட தமிழ் மக்களின் வாக்குகளை கவரும் நோக்கிலானதாக இருக்கலாம். அதுபோலவே பிரதான வேட்பாளர்கள் மீது வெறுப்புற்ற முஸ்லிம்களின் வாக்குகளைப் பிரிக்கவும் மூன்று வேட்பாளர்கள் களத்தில் இருக்கிறார்கள். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இலியாஸ் சுயேட்சையாகப் போட்டியிடுகிறார். உயர்கல்வித்துறை பிரதி அமைச்சராக இருந்த மயோன் முஸ்தபாவும் சுயேட்சையாக் களமிறங்கியுள்ளார். இவர் ஐதேகவில் இருந்து ஆளுமகட்சிக்குத் தாவியவர். ஐதேக ஆதரவு முஸ்லிம் வாக்குகளை இவர் உடைத்து விடுவார். இவரைவிட ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணியின் சார்பில் இஸ்மாயில் என்பவர் போட்டியிடுகிறார்.



மொத்தம் மூன்று முஸ்லிம் வேட்பாளர்கள் போட்டியிடும் நிலையில் முஸ்லிம் வாக்குகள் கணிசமானளவுக்குப் பிரியலாம் என்ற நிலையே காணப்படுகிறது. ஆனால் பிரதான முஸ்லிம் கட்சிகள் அனைத்தும் இரு பிரதான வேட்பாளர்களுடனும் இருப்பது குறிப்பிடத்தக்கது.



அதேவேளை விக்கிரமபாகு கருணாரத்னவும் சிறுபான்மையின மக்களின் வாக்குளைப் பிரிக்கக் கூடிய ஒருவராகவே இருக்கிறார். இவ்வாறு சிறுபான்மையினரின வாக்குகளைப் பிரிப்பதற்கு வேட்பாளர்கள் பலர் களத்தில் இருக்கின்ற நிலையில்- சிங்கள வாக்காளர்களின் வாக்குகளைப் பிரிப்பதற்கும் அதிகளவிலானோர் களமிறங்கியுள்ளனர். இதனால் வாக்குகள் பிரிந்து செல்வதற்கு அதிகம் வாய்ப்புகள் உள்ளன.



முதற்சுற்றில் மட்டுமே இந்த உதிரி வேட்பாளர்களால் பிரதான வேட்பாளர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்து முடியும். இரண்டாவது சுற்று எண்ணப்படும்போது உதிரி வேட்பாளர்களின் வாக்குகள் நிராகரிக்கப்பட்டு விடும் என்பதால் இரண்டாவது விருப்பத்தெரிவு முக்கியத்துவம் பெறுகிறது.

நிறைவேற்று அதிக ஜனாதிபதி பதவியை ஒழிக்கப் போவதாக முக்கியமான கட்சிகள் கூறிக் கொண்டிருக்கும் நிலையில் இது அந்தப் பதவிக்கான கடைசித் தேர்தலாகக் கூட அமையலாம்.இந்தத் தேர்தலில் வாக்களிப்பதற்கு ஒரு கோடி 40 இலட்சத்து 88 ஆயிரத்து 500 வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர். இவர்களில் 19 இலட்சத்து 55 ஆயிரத்து 312 பேரிடம் தேசிய அடையாள அட்டை கிடையாது. இது யாழ்.மாவட்டம் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களின் கணிப்பு. ஆனால் உரிய அடையாள அவணமின்றி தேர்லில் வாக்களிக்க முடியாது என்ற கட்டுப்பாடு இறுக்கமாக பேணப்பட்வுள்ளதால் பெருமளவு மக்;கள் தமது வாக்குரிமையை பயன்படுத்த முடியாது போகலாம்.



குறிப்பாக வன்னி தேர்தல் மாவட்டத்தைச் சேர்ந்த 42 வீத வாக்காளர்களிடம் தேசிய அடையாள அட்டை கிடையாது. யாழ்ப்பாணத்தில் எவ்வளவு பேரிடம் இல்லை என்பது பற்றிய தரவுகளே தேர்தல் திணைக்களத்திடம் இல்லை. அதுபோலவே கிழக்கில் 1 இலட்சத்து 90 ஆயிரம் பேரிடம் உரிய அடையாள அட்டை கிடையாது. எனினும் விசேட அடையாள அட்டைகளை வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இது எந்தளவுக்கு வெற்றி பெறும் என்பது தெரியாது. குறிப்பாக இந்தத் தேர்தலில் தமிழ் வாக்காளர்கள் வாக்களிக்க முடியாது போகாலாம். அல்லது வாக்களிப்பில் இருந்து ஒதுங்கிக் கொள்ளலாம் என்ற நிலையே காணப்படுகிறது.



யாழ்ப்பாணத்தில் இடம்பெயர்ந்த வாக்காளர்கள் 20 ஆயிரம் பேருக்கு மேல் இருக்கின்ற போதும் வாக்களிப்பதற்கு ஆயிரத்துக்கும் குறைவானோரே விண்ணப்பித்துள்ளனர். இது இந்தத் தேர்தலில் தமிழர்கள் அதிக நாட்டம் காட்டவில்லை என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு.



ஆனால் இந்தத் தேர்தலில் தமிழ்மக்களின் தெரிவு முடிவு எப்படி இருக்கப் போகிறது என்று சர்வதேசம் உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறது. எனவே இந்தத் தேர்தல் இலங்கையின் வரலாற்றில் பல முக்கிய முடிவுகளுக்குக் காரணமாக அமையலாம் என்ற கருத்தையும் மறுப்பதிற்கில்லை.

(infotamil )
  • மேலதிக செய்திகளுக்காக
  • 0 Kommentare:

    Kommentar veröffentlichen