சகோதரனே! நானறியாப் புலன்களையெல்லாம்
உணர்வுகளில் பதித்துச் செல்பவனே
எந்த மனிதன் உனது கீதங்களைத் திருடிச் சென்றான்?
கை கட்டி வாய் பொத்திக் கண்மூடி நின்று சுழலென
எந்த மனிதன் உனை நிறுத்திப் போனான்?
கட்டாயமானதொரு தருணத்தில்
காலம் உனைப் பாலைநிலத்திலிருந்து பெயர்த்துவந்து
போர் ஓய்வுகொண்ட
தாய்நிலந்தன்னில் விட்டுப் போயிற்று
அவர்கள் குழி தோண்டிப் புதைக்கும்
உண்மைகளையெல்லாம்
எடுத்தோதும் பணியொன்றைத்
தெய்வம் உன்னிடம் தந்தகன்றது
எமது எழுதுகோல்களையெல்லாம் உன் வசம் விட்டுத்
திசைகள் எட்டிலும் காத்திருக்கலானோம்
எழுதும் பெயர் எதுவாயினும்
உனதெழுத்து அதுவே என்பதை
மனதின் நாவுகள் அதிர்ந்ததிர்ந்து உள்ளுணர்வில் பறையும்
செம்பிறைக் கொடிகள் என் மனவெளியெங்கும்
படபடத்துப் படபடத்துப் பறந்தோயும்
பிறப்பிலும் இறப்பிலும் வரும் பெருநாட்களிலும்
வானில் பிறையெழுந்து எமைத் திசைப்படுத்தும்
செம்பிறை போல் நீயும் சகீ
எமை வழிகூட்டிச் செல்வாய் என
உலமாக்களும் பெரியோரும்
பல்லாண்டுத் துயில் விட்டு எழுந்திடவே இல்லை
பள்ளிவாயில்களில் கேட்கும் பிரசங்கங்களில்
சிலந்திவலைகள் தொங்கிக் கிடக்கின்றன
நல்லதோ கெட்டதோ எனத் தெரியாத கோபங்களோடு
மரணத்தின் தலைவாயில் வரைக்
கூட்டி வந்து விடப்பட்டவர் நாம்
எனதபிமானத்தை வென்றவனே!
நம் தேச எழுச்சியில் உன் பாடல் கேட்டிடவும்
இளைஞர் அணியோடு உன் பாதம் பயணித்திடவுமாய்
நண்பர்களோடு நானும் அவாவி நிற்கிறேன்
- ஃபஹீமாஜஹான்,
இலங்கை
நன்றி: எங்கள் தேசம்
RSS Feed
Twitter



Mittwoch, März 03, 2010
வானதி




0 Kommentare:
Kommentar veröffentlichen